ஆந்திராவில் அமைக்கப்பட உள்ள கொவ்வாடா அணுமின் நிலைய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலம், ரணஸ்தலம் மண்டல் என்னும் பகுதியில் அமெரிக்கா அரசின் உதவியுடன், கொவ்வாடா அணுமின் நிலையம் அமைக்கப்படும் என ஒன்றிய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த அணுமின் நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்ரீகாகுளம் மாவட்ட செயலாளர் கோவிந்த ராவ் கூறுகையில், இந்த அணுமின் திட்டத்தால் ஏதேனும் மோசமான நிகழ்வு நடந்தால், அதன் தாக்கம் ஆந்திராவின் காக்கிநாடாவில் இருந்து, ஒடிசாவின் சத்ராபூர் வரை இருக்கும். இந்த திட்டத்தால் வரும் பலன்களை விட நாட்டின் நிதிச்சுமையே அதிகரிக்கும். இந்த திட்டமானது நமது சுற்றுச்சூழலை அழித்து, அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க மட்டுமே உதவும், என்றார்.
மேலும், பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் செழிக்க இந்திய நாட்டின் சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஆகியவற்றை அழிக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து ஆவேச முழக்கங்கள் எழுப்பப்பட்டது.